Saturday, May 12, 2018

61. திவ்யதேச தரிசன அனுபவம் - 40 கண்டம் என்னும் கடிநகர் (தேவப்பிரயாகை) - 102

தரிசனம் செய்த நாள்: 03.05.18  வியாழக்கிழமை 
வடநாட்டுத் திருப்பதிகள் - 12
7. திருக்கங்கைக்கரைக்கண்டம்(102)


7. திருக்கங்கைக்கரைக்கண்டம்
மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102))
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்  செல்லும் வழியில் வரும் முதல் திவ்யதேசம் இது. ரிஷிகேஷிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கங்கோத்ரியிலிருந்து கிளம்பி வரும் பாகீரதி நதியும் பத்ரிநாத்தில் பிறந்து வரும் அலகானந்தா நதியும் இணைந்து கங்கை என்ற நதியாக உருவெடுக்கும் அற்புதமான இடம் இது. பாகீரதியின் பச்சை நிறத் தண்ணீரும் அலகானந்தாவின் சாம்பல் நிறத் தண்ணீரும் ஒன்று கலப்பது கண்கொள்ளாக் காட்சி.

இந்த சங்கமத்தில் நீராடி விட்டு பல படிகள் ஏறிக் குன்றின் மீது அமைந்திருக்கும்  'வண்  புருஷோத்தமன்' என்னும் நீலமேகப் பெருமாளின் திவ்யதேசத் திருக்கோவிலை அடைய வேண்டும்..





பிரயாகை என்றால் இரு நதிகள் இணையும் இடம் என்று ஒரு பொருள் உண்டு. இரண்டு தேவ நதிகள் இங்கு இணைவதால், இத்தலம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.

பிரயாகை என்றால் தவம் செய்யச் சிறந்த இடம் என்றும் பொருள். பிரம்மா, தசரதர், ராமர், பரத்வாஜர் ஆகியோர் இங்கே தவம் செய்திருக்கின்றனர். பரத்வாஜர் இங்கே தவம் செய்த பிறகுதான் சப்தரிஷிகளில் ஒருவராக ஆனார்.

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள ராமர் இங்கே தவம் செய்தார். அதனால் இந்தக் கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் அமர்ந்து தவம் செய்த இடத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

மூலவர் - நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன்
நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
தாயார் - புண்டரீகவல்லி (தாயார் சந்நிதி தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் இருக்கும் தாயாரின் பெயர் இது என்றுதான் கொள்ள வேண்டும்.)
தீர்த்தம் - மங்கள தீர்த்தம், கங்கா நதி
விமானம் -  மங்கள விமானம்

கோவிலில் நரசிம்மர், ஆஞ்சநேயர், அன்னபூரணி, வாமனர், சிவன், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. முன்பே குறிப்பிட்டது போல் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட மேடையும் இருக்கிறது.

கோவிலுக்குச் செல்லும் வழியை இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.


இந்த திவ்ய தேசம் பற்றி  வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் கேட்கலாம்



இந்த திவ்ய தேசம் பற்றி, பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழியில் பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த திவ்ய தேசத்துக்குச் செல்ல முடியாதவர்கள் இந்தப் பாசுரங்களப் படித்தாலே இந்த திவ்யதேசத்தில் கங்கையில் நீராடிய அனுபவம் கிடைக்கும் என்கிறார் அவர்.

பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி 
நான்காம் பத்து 
ஏழாம்  திருமொழி
1. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே. (391)

2. சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (392)

3. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (393)

4. இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (394)

5, உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (395)

6. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (396)

7. விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி
மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (397)

8. திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே. (398)

9. வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (399)

10. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (400)

11. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே. (401)

ஓம் நமோ நாராயணாய !


No comments:

Post a Comment