Monday, October 22, 2018

67. திவ்யதேச தரிசன அனுபவம் - 46. திருவெள்ளியங்குடி (29)

தரிசனம் செய்த நாள்: 20.10.18 சனிக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
29. திருவெள்ளியங்குடி



29. திருவெள்ளியங்குடி
காலளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற‌
நூளலவே யன்றி நுவல்வாரார்? - கோலப்
பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த‌
திருவெள்ளி யங்குடியான் சீர். (29)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில் உள்ள சேங்கானூரிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி திவ்யதேசம் .

 கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள  சோழபுரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும்,    கும்பகோணம் - ஆடுதுறை பஸ் மார்க்கத்தில் உள்ள முட்டக்குடியிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது இந்தக் கோவில்.


திருவெள்ளியங்குடி என்ற இந்த திவ்ய தேசம் நான்கு யுகங்களாக  இருந்து வருவதாக ஐதீகம்.

திரேதா யுகத்தில் பிரம்ம புத்திரம், கிருத யுகத்தில் பரசுராம், துவாபர யுகத்தில் இந்திர நகரம், தற்போதைய கலியுகத்தில் பார்க்கவபுரம் ஆகிய பெயர்களுடன் விளங்கி வந்திருக்கிறது இந்த திவ்ய தேசம். பார்க்கவர் என்பது சுக்கிரனின் (சுக்கிராச்சாரியார்) இன்னொரு பெயர்.

அசுரர்களின் குலகுரு சுக்கிராச்சாரியார்.
இவர்தான் நவக்கிரகங்களில் ஒருவரான  சுக்கிரன் (தமிழில் வெள்ளி.)  

வாமனருக்கு மூன்று அடி மண் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி  ஒப்புக்கொண்டபோது வேண்டாம் என்று தடுத்தார் அவனுடைய குரு சுக்கிராச்சாரியார். ஆனால் மகாபலி அவர் பேச்சைக் கேட்கவில்லை.

கமண்டலத்திலிருந்து நீரைக் கையில் எடுத்து அவன் தாரை வார்க்க முற்படுகையில், சுக்கிராச்சாரியார் ஒரு சிறிய பூச்சியாக மாறி கமண்டலத்திலிருந்து நீர் வர முடியாமல் துவாரத்தை அடைத்துக் கொண்டார்.

உண்மையை அறிந்த வாமனர் ஒரு ஈர்க்குச்சியால் கமண்டலத்தின்  ஒட்டையில் குத்தினார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண்ணில் அந்தக் குச்சி குத்தி அந்தக் கண் குருடானது. இந்த திவ்யதேசத்திற்கு வந்து பெருமாளை வேண்டிய பிறகுதான் பார்வை இழந்த கண்ணுக்கு மீண்டும்  பார்வை கிடைத்தது. வெள்ளிக்கு (சுக்கிரனுக்கு) அருள் பாலித்ததால் இந்தத் தலம் திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படுகிறது.

இது வைணவ சுக்கிர ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது

சுக்கிரனுக்குப் பார்வை கிடைத்த ஸ்தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கண் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. சுக்கிரன் தொடர்புடைய திருத்தலம் என்பதால், பணப் பிரச்னைகள், வியாபாரப் பிரச்னைகள், திருமணத் தடை போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.





தேவர்குலச் சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இணையாகத் தானும் விளங்க வேண்டும் என்று அசுரகுலச் சிற்பி மயன் இந்தப் பெருமாளிடம் வேண்டித் தவம் செய்தான். விஷ்ணு அவனுக்கு சங்கு சக்கரம் ஏந்தியபடி நான்கு கரங்களுடன் காட்சி அளித்தார்.

ஆனால் தனக்கு ராமபிரானாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று மயன் வேண்டிக் கொள்ள , சங்கு சக்கரங்களை கருடனிடம் கொடுத்து விட்டு இரு கரங்களுடன் வில் ஏந்தியபடி ராமனாக மயனுக்குக் காட்சி அளித்தார் பெருமாள். அதனால் இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு கோல வில்லி ராமர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

ஆயினும் மூலவர் கிடந்த கோலத்தில் க்ஷீராப்தி நாதர் என்ற பெயரிலும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி மரகததவல்லித் தாயாரோடு சிருங்கார சுந்தரர் என்ற பெயரிலும் விஷ்ணுவாகவே எழுந்தருளி இருக்கின்றனர்.

சப்தராமஸ்தலம் என்று கூறப்படும் ஏழு ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றவை அயோத்தி, திருப்புல்லாணி, திருப்புட்குழி, புள்ளபூதங்குடி, திருவள்ளூர், சீர்காழி. இவற்றுள், திருவெள்ளியங்குடியில் உள்ளது போலவே திருப்புட்குழி, திருவள்ளூர் திவ்ய தேசங்களில் பெருமாள் முறையே விஜயராகவன், வீரராகவன் என்று ராமர் பெயரைத் தாக்கியிருந்தாலும் ராமர் உருவில் எழுந்தருளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர்: க்ஷீராப்தி நாதர். கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. இங்கே மூலவர் நீலவண்ணத்தில் இருக்கிறார். திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்யதேசங்களில் மட்டும்தான் மூலவர் நீலவண்ணத்தில் இருப்பதாக அர்ச்சகர் கூறினார். .

உற்சவர்: சிருங்கார சுந்தரர். ஸ்ரீதேவி பூதேவி மரகதவல்லித் தாயாருடன் காட்சி  அளிக்கிறார்.

தாயார்: மரகத வல்லி. தனிக்கோவில் நாச்சியார்

விமானம்:  புஷ்கலாவர்த்தக விமானம்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம்

பிராத்தியட்சம்: சுக்கிரன், பிரம்மா, இந்திரன், மார்க்கண்டேயர், மாயன், பராசரர், பூமிதேவி (இவர்களுக்கு இங்கே பெருமாள் காட்சி கொடுத்திருக்கிறார்.)

ஒப்பிலியிப்பன் கோவிலில் உள்ளது போல் சந்நிதியில் ஒருபுறம் (திருமுடிக்கருகே) மார்க்கண்டேயரும், மறுபுறம் (திருவடியருகே) பூமாதேவியும் இருக்கிறார்கள்.

சுக்கிராச்சாரியாருக்குப் பார்வை கொடுத்ததன் நினைவாக சந்நிதியில் ஒரு அணையாத தீபம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதை எப்போதும் ஒளிவிடச் செய்ய நல்லெண்ணெய்க்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளைத் தந்து உதவலாம்.

சந்நிதிக்கு வெளியே இடப்புறச் சுவற்றில் சற்று உயரமான நிலையில் கிருஷ்ணன் விக்கிரகம் உள்ளது.

திருமஞ்சனதுக்கான விக்கிரகங்கள் சந்நிதிக்கு வெளியே வலப்புறச் சுவற்றில் சற்று மேலே உள்ள பிறையில் உள்ளன. இந்த விக்கிரகங்களுக்கு திருமஞ்சன பேரர் என்று பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது.

வெளியே உள்ள மண்டபத்தில் வலது புறம் வரதன், யோக நரசிம்மர் விக்கிரகங்கள் உள்ளன. இடது புறமாக நம்மாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகரர், ராமானுஜர், தேசிகர்  விக்கிரகங்கள் உள்ளன.

துவஜஸ்தம்பம் அருகே பெருமாளை நோக்கியபடி எல்லாக் கோவில்களிலும் இருப்பது போல் கருடர் சந்நிதி. ஆனால் இவர் சதுர்புஜ கருடராக நான்கு கரங்களுடன் இருக்கிறார். பெருமாள் கொடுத்த சங்கு சக்கரத்தை இரு கரங்களில் ஏந்தி இருக்கிறார். ஒரு காலை மண்டியிட்டு எழுந்து நிற்கத் தயாரான நிலையில் இருக்கிறார்,  பெருமாள் கேட்கும்பொது  சங்கு சக்கரத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாரான நிலையில்! வாகன விபத்துகளைத் தடுக்க உதவுபவர் இந்த கருடன் என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாக மரகதவல்லித் தாயாருக்கு தனிச்சந்நிதி உள்ளது. பிரகாரத்தின் மறுபுறத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது.

பிரகாரத்தில் சந்நிதிக்கு வலப்புறமாக இந்த திவ்யதேசத்தின் ஸ்தல விருட்சமான செவ்வாழை மரம் உள்ளது. இது காலம் காலமாக வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறது. இப்போதும் வருடத்துக்கு ஒருமுறை குலை போட்டு மீண்டும் தானே வளர்கிறது.

இந்த ஊருக்கு அருகில் உள்ள சேங்கனூர் வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம்

கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் 
கோவிலுக்கு எதிரே சற்றுத்  தொலைவில்
ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில்
உள்ளது. கோலவில்லி ராமரை நோக்கி வணங்கியபடி நிற்கிறார் ஆஞ்சநேயர் .


கோவில் வாசலில் அடியேன், மனைவியுடன் 

இந்தக்கோவில் பற்றிய நான்கு வீடியோக்கள் youtubeஇல் கிடைத்தன. அவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன்.





முதல் வீடியோவில் கோவிலின் பல பகுதிகளும் காட்டப்படுகின்றன, பின்னணியில் இளையராஜா பாடும் பக்திப்பாடலுடன்.



இரண்டாவது வீடியோவில் கோவில் பற்றிய விவரங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்லன.



மூன்றாவது வீடியோவில் திருமஞ்சனம் காட்டப்படுகிறது.



நான்காவது வீடியோவில் கோவிலில் பல இடங்கள் காட்டப்படுவதுடன், அர்ச்சகர் அளிக்கும் சில விஷயங்களும் இடம் பெற்றுள்ளன..

இந்த திவ்யதேசம் திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவெள்ளியங்குடி
1. ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் 
      ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் 
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து 
      பெரு நிலம் அளந்தவன் கோயில்- 
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் 
      எங்கும் ஆம் பொழில்களின் நடுவே 
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1337)
 
2. ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு 
      அரக்கர்-தம் சிரங்களை உருட்டி 
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் 
      கண்ணனார் கருதிய கோயில்- 
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி 
      பொதும்பிடை வரி வண்டு மிண்டி 
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1338)
 
3. கடு விடம் உடைய காளியன் தடத்தைக் 
      கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் 
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் 
      பல் நடம் பயின்றவன் கோயில்- 
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் 
      பயிற்றிய நாடகத்து ஒலி போய் 
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1339)
 
4. கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த 
      காளமேகத் திரு உருவன் 
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற 
      பரமனார் பள்ளிகொள் கோயில்- 
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் 
      தொகு திரை மண்ணியின் தென்பால் 
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1340)
 
5. பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து 
      பாரதம் கையெறிந்து ஒருகால் 
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த 
      செங் கண் மால் சென்று உறை கோயில்- 
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி 
      எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி 
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1341)
 
6. காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை 
      உற கடல் அரக்கர்-தம் சேனை 
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த 
      கோல வில் இராமன்-தன் கோயில்- 
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் 
      ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி 
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1342)
 
7. ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த 
      மாவலி வேள்வியில் புக்கு 
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு 
      திக்கு உற வளர்ந்தவன் கோயில்- 
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் 
      அரி அரி என்று அவை அழைப்ப 
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1343)
 
8. முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-
      தம் பெருமானை அன்று அரி ஆய் 
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட 
      மாயனார் மன்னிய கோயில்- 
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் 
      பதித்த பல் மணிகளின் ஒளியால் 
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1344)
 
9. குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் 
      குணங்களே பிதற்றி நின்று ஏத்த 
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற 
      ஆழியான் அமர்ந்து உறை கோயில்- 
கடி உடைக் கமலம் அடியிடை மலர 
      கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய 
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் 
      வயல்-வெள்ளியங்குடி-அதுவே             (1345)
 
10' பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் 
      பார் இடந்து எயிற்றினில் கொண்டு 
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற 
      திருவெள்ளியங்குடியானை 
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் 
      மான வேல் கலியன் வாய் ஒலிகள் 
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் 
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே             (1346)


ஓம் நமோ நாராயணாய 

Sunday, October 21, 2018

66. திவ்யதேச தரிசன அனுபவம் - 45. 21.திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)

தரிசனம் செய்த நாள்: 20.10.18 சனிக்கிழமை  
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40  
21.திருநந்திபுரவிண்ணகரம்
  

21.திருநந்திபுரவிண்ணகரம்
செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


கும்பகோணத்திலிருந்து சுமார்  16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும்  நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.  திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது  நாதன் கோவில்.

விண்ணகரம் என்ற பெயர் வைகுண்டத்தைக் குறிக்கும். விண்ணகரம் என்று பெயர் கொண்ட மற்ற திவ்யதேசங்கள் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவை.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று திப்பிராஜபுரம் அருகில் மேற்கே செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து   இன்னொரு வழியும் இருக்கிறது.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பழையாறை என்ற ஊர்
அமைந்துள்ளது. இது சோழர்களின் தலைநகராக வழங்கிய ஊராக இருக்கலாம். ஆனால் இப்போது ஒரு குக்கிராமமாகத்தான் காட்சி தருகிறது 

சிவபெருமானின் வாகனமான நந்தி ஒருமுறை விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றபோது, அங்கே துவாரபாலகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், துவாரபாலகர்களின் சாபத்துக்கு ஆளானார். அதனால் நந்திக்கு உடல் முழுவதும் வெப்பம் ஏற்பட்டது. தன்  சாபத்தைப் போக்கிக்கொள்ள அவர் சிவபெருமானின் யோசனைப்படி செண்பகவனம் என்ற இடத்தில் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார். விஷ்ணு அவருக்குக் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. இந்த ஊர் நந்திபுரம் என்று பெயர் பெற்றது.

நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இதற்கு நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.

மகாலக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் தான் இடம் பெற வேண்டும் என்று  வேண்டி செண்பக வானம் என்ற இந்த இடத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். 

திருமகளின் நாதனாகப் பெருமாள்  இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார் என்பதையும்  நாதன் கோவில்  என்ற பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.

மூலவர்: ஸ்ரீனிவாசன். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 

உற்சவர்: ஜகந்நாதன். 

தாயார்: செண்பகவல்லி. பிரகாரத்தின் இறுதியில் பெருமாளை  நோக்கியபடி கிழக்கு நோக்கி  தனிக்கோவில் நாச்சியாராக  அமர்ந்திருக்கிறார்.

விமானம்: மந்தார விமானம் 

புஷ்கரணி: நந்தி புஷ்கரணி.

கர்ப்பக்கிருகத்தில் பிரம்மாவும், நந்தியும்.  பெருமாளை வணங்கியபடி  இருக்கிறார்கள் . 
மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும், உற்சவர் பெயரிலேயே இந்தக் கோவில் ஜகந்நாதர் கோவில் என்றும், நாதன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே, சந்நிதிக்கு வலது புறத்தில் ஆழ்வார்கள் விக்கிரகங்கள் உள்ளன. ஆழ்வார்களுக்கு அடுத்தபடி ராமானுஜர் இரு புறமும் இரு சீடர்களுடன் சேவை சாதிக்கிறார்.

சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் விக்கிரகம்
சற்று உயரத்தில் அமைந்துள்ளது. 

ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குக் கீழே ஒரு மன்னர் தன்  இரண்டு ராணிகளுடன்  நிற்கும் தோற்றம். இது  கோவிலைக் கட்டிய அல்லது கோவிலுக்குத் திருப்பணி செய்த  சொக்கப்ப நாயக்கர் என்ற மன்னரின் உருவச்சிலை  என்று அர்ச்சகர் கூறினார். இவருக்கு அருகில் குந்தவையின் உ ருவச்சிலையும் உள்ளது.

கோவிலின் முன் அடியேனும், என் மனைவியும் 



















இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வாரால் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்து பாடல்களில் பெருமாளை கிருஷ்ணனாகவும், அடுத்த ஐந்து பாடல்களில் ராமனாகவும் நினைத்துப் பாடியிருக்கிறார் ஆழ்வார்.









பாசுரங்கள்  இதோ:

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநந்திபுரவிண்ணகரம்
1. தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு 
      விசும்பும் அவை ஆய் 
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை 
      ஆய பெருமான் 
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட 
      மார்வர் தகைசேர் 
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1437)
 
2. உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன் 
      மேவும் நகர்-தான்- 
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் 
      கிண்டி அதன்மேல் 
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1438)
 
3. உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட 
      மார்வர் தகை சேர் 
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி 
      கங்குல் வயல் சூழ் 
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1439)
 
4. பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என 
      வந்த அசுரர் 
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல 
      நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல 
      அடிகொள் நெடு மா 
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1440)
 
5. மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என 
      வந்த அசுரர் 
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி 
      ஆம் அளவு எய்தான் 
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை 
      அம்கை உடையான் 
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1441)
 
6. தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை 
      ஆக முன நாள் 
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது 
      மேவும் நகர்-தான்- 
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் 
      ஆர் புறவு சேர் 
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1442)
 
7. தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் 
      நந்தன் மதலை 
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ 
      நின்ற நகர்-தான்- 
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள் 
      ஆடு பொழில் சூழ் 
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1443)
 
8. எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
      யாளர் திரு ஆர் 
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு 
      கூட எழில் ஆர் 
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் 
      தாம் மலர்கள் தூய் 
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1444)
 
9. வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக 
      மிக்க பெருநீர் 
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் 
      அறிதியேல் 
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி 
      எங்கும் உளதால் 
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1445)
 
10. நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் 
      நண்ணி உறையும் 
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
      யானை ஒளி சேர் 
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை 
      ஐந்தும் ஐந்தும் 
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் 
      முழுது அகலுமே             (1446)


ஓம் நமோ நாராயணாய 






























Wednesday, September 5, 2018

65. திவ்யதேச தரிசன அனுபவம் - 44, திருப்பேர் நகர் (கோவிலடி) 8


தரிசனம் செய்த நாள்: 31.08.18 வெள்ளிக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40  
8. திருப்பேர் நகர்  (கோவிலடி)  (8)  



8. திருப்பேர்நகர்
போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8) 
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், கல்லணையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்பேர்நகர் என்னும் கோவிலடி. திருச்சியிலிருந்து நேரடி பஸ் இல்லை. திருச்சியிலிருந்து கல்லணை வந்து, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி/திருவையாறு .செல்லும் பஸ்ஸில் வர வேண்டும். திருச்சி, தஞ்சை, கும்பகோணத்திலிருந்து காரில் வருபவர்கள் அன்பில், கோவிலடி இரண்டையும் தரிசிக்கலாம்.
கொள்ளிடத்தின் தெற்குக்  கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசம்,
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அன்பிலுக்குக் கிட்டத்தட்ட நேர் எதிரே அமைந்துள்ளது கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்றால்  இந்த இரு திவ்யதேசங்களுக்கும் இடையே உள்ள தூரம் 1 கிலோமீட்டர்தான். ஆனால், சாலை வழியே கோவிலடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, அரியூர் இவற்றைத் தாண்டி அன்பில் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோவிலுக்குத் தென்புறம் சற்றுத் தொலைவில் காவிரி  ஓடுகிறது.   கொள்ளிடம், காவிரிக்கு இடையே அமைந்திருக்கும் விதத்தில், இந்தக் கோவிலும் ஸ்ரீரங்கத்தை ஒத்திருக்கிறது. இங்கே எழுந்தருளியிருப்பவர் ரங்கநாதர். இவர் ஸ்ரீரங்கத்திலிருயிருந்து தள்ளி - ஸ்ரீரங்கத்துக்கு அப்பால்- அமைந்திருப்பதால், அப்பால ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

காவிரிக்கரையில் அமைந்துள்ள  பஞ்சரங்க க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ரங்கநாதர் ஆலயங்களில், ஸ்ரீரங்கப்பட்டினம் (பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் உள்ளது) ஆதிரங்கம் என்றும், ஸ்ரீரங்கம் மத்யரங்கம் என்றும், கோவிலடி அப்பால ரங்கம் என்றும், கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சதுர்த்தரங்கம் என்றும், மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் பஞ்சரங்கம் என்றும் அழைக்கப்படுகின்றன. சிலர் சீர்காழி அருகே உள்ள வட்டரங்கம்தான் சதுர்த்தரங்கம் என்று கூறுவர்.  .

சற்று உயரத்தில் அமைந்துள்ள கோவிலின் முகப்பு திருவெள்ளறையை நினைவுபடுத்துகிறது. 21 படிகள் எறி மேலே செல்ல வேண்டும். இந்திரகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது இந்தக் கோவில்.

சோழர் காலத்தில் பேர் என்று அழைக்கப்பட்டந்த இந்த ஊர்
பிற்காலத்தில் திருப்பேர் நகர் என்று பெயர் பெற்றது. ஆழ்வார்கள் தங்கள் பாசுரத்தில் இந்த திவ்யதேசத்தை 'பேர் என்றும் 'திருப்பேர் நகர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

வைணவ மரபில் கோவில் என்றால் திருவரங்கம் கோவிலைத்தான் குறிக்கும். திருவரங்கம் கோவிலுக்குச் சற்றுத் தள்ளி அமைந்திருப்பதால், இந்தத் திருத்தலத்துக்கு கோவிலடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பால ரங்கநாதர் என்ற பெயரும் கிட்டத்தட்ட இதே பொருளைத்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துர்வாசரின் சாபத்தால் தன் சக்தியை இழந்த உபமன்யு என்ற மன்னன் தன் பாவத்தைப் போக்கிக்கொள்ள ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்தான்.

அப்போது அங்கே வந்த ஒரு முதியவர் அத்தனை உணவையும் அவர் ஒருவராகவே புசித்து விட்டு, அப்படியும் பசியடங்காமல் நின்றார்.

"தங்கள் பசியாற  நான் என்ன செய்ய வேண்டும்?" என்று உபமன்யு கைகூப்பிக் கேட்டபோது, ஒரு குடம் நிறைய நெய்யில் செய்த அப்பம் வேண்டும் என்று முதியவர் கேட்க, மன்னன் அவ்வாறே செய்து அவருக்கு நிவேதனம் செய்தான்.

அப்பத்தை உண்டு அவனுக்குத் தன திருவுருவைக் காட்டி அவனை


சாபத்திலிருந்து விடுவித்தார் முதியவராக வந்த பெருமாள். இதனால் பெருமாளுக்கு அப்பக்குடத்தான் என்று பெயர்.

இன்றும் தினமும் இரவில் பெருமாளுக்கு நெய்யப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

இந்தப் பெருமாள் பராசர முனிவருக்கும் காட்சி கொடுத்ததா4கக் கூறப்படுகிறது.

மார்க்கண்டேயரை யமனிடம் காப்பாற்றி அவருக்கு சிரஞ்சீவித்தன்மையை வழங்கியவரும் இந்தத் தலத்தில் அருள் பாலிக்கும் ரங்கநாதர்தான் என்ற வரலாறும் உண்டு.

இந்திரனின் கர்வத்தைப் பெருமாள் அடக்கியதாகவும் வரலாறு உண்டு.





இந்த எல்லா வரலாறுகளையும் குறிக்கும் வகையில் பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது. புஜங்க சயனத்தில் ரங்கநாதர் மேற்கு நோக்கி சயனித்திருக்கிறார். அவர் தலைக்கருகே பெருமாளை வணங்கியபடி இருக்கும் மார்க்கண்டேய முனிவரின் தலையில் பெருமாள் தன் வலது கரத்தை வைத்து அருள் பாலிக்கிறார்.

உயர்ந்திருக்கும் இடது கரத்தை இந்திரன் தலை மீது வைத்து அருள் பாலிக்கிறார். திருவடி அருகே பூமிப்பிராட்டி வணங்கியபடி இருக்கிறார். பெருமாளின் தலைமாட்டுக்குக் கீழ் அவரது வலது கைக்கருகே  ஒரு (அப்பக்)குடம் இருக்கிறது.

சந்நிதியில் துர்வாசர், உபமன்யு ஆகியோரும் இருக்கிறார்கள்.

மூலவர் - அப்பால ரங்கநாதர், அப்பக்குடத்தான், புஜங்க சயனம், மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

 உற்சவர் - அப்பக்குடத்தான், கனகவல்லி, பூமாதேவித் தாயார், ஆண்டாள், நர்த்தனமாடும் கிருஷ்ணர்  ஆகியோருடன் சேவை  சாதிக்கிறார்.

 தாயார் - இந்திராதேவி அல்லது கனகவல்லி  பெருமாள் சந்நிதிக்கு வெளியே,  இடப்புறத்தில் கனகவல்லித் தாயார் சந்நிதி  உள்ளது. தாயார் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் காட்சி தருகிறார்.

விமானம் - இந்திர விமானம்

புஷ்கரணி - காவிரி, இந்திர புஷ்கரணி. கோவிலுக்கு சற்றுத்  தொலைவில் உள்ள புஷ்கரணியில் செடிகள் மண்டி, பயன்படுத்தப்பட்ட முடியாத நிலையில் இருப்பதாக, கோவிலில் மேளம் வாசிப்பவர் கூறினார்.   .

பெருமாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் சந்நிதிக்கு வலப்புறமாக விஷ்வக்சேனர் ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. பிரகாரத்தின் முடிவில் ஒரு விநாயகர் சந்நிதி இருக்கிறது. இவர் வழிகாட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த திவ்ய தேசத்தை பெரியாழ்வார் (2 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (19 பாசுரங்கள்), திருமழிசை ஆழ்வார் (1 பாசுரம்), நம்மாழ்வார் (11 பாசுரங்கள்) ஆகிய நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். திருப்பேர் நகர் பாசுரங்களை இயற்றியதும் நம்மாழ்வார் வைகுண்டம் எழுந்தருளி விட்டார். எனவே நம்மாழ்வாருக்கு முக்தி அளித்த க்ஷேத்திரம் இது என்ற பெருமை பெற்றுள்ளது.

பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
கோல் கொண்டுவா எனல்
2. கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் 
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் 
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல் 
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா 
      அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா            (172)


பாலக் கிரீடை
4. கொண்டல்வண்ணா இங்கே போதராயே 
      கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே 
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த 
      திருநாரணா இங்கே போதராயே 
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி 
      ஓடி அகம் புக ஆய்ச்சிதானும் 
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக் 
      கண்ணபிரான் கற்ற கல்வி தானே             (204)


இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருப்பேர் நகர்
1. கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன் 
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும 
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் 
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே             (1427)
 
2. வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் 
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை 
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் 
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே             (1428)
 
3. ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால் 
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான் 
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல 
்கரு வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே          (1429)
 
4. ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் 
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் 
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே             (1430)
 
5. வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் 
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை 
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த 
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே 
                                                                                                                                  (1431)
 
6. விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால் 
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் 
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு 
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே           (1432)
 
7. வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி 
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான் 
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை 
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே         (1433)
 
8. அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் 
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் 
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் 
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே                           (1434)
 
9. நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் 
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் 
சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார் 
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே                               (1435)
 
10. வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி 
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத் 
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை 
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே                            (1436)


இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

பதினெண் திருப்பதிகள்
4. துளக்கம் இல் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய் அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே (1850) 10. பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே (1856)

இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

திருக்குறுந் தாண்டகம்
2047 பேசினார் பிறவி நீத்தார்- பேர் உளான் பெருமை பேசி ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம் பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு ஆசையோ பெரிது கொள்க- அலை கடல் வண்ணர்பாலே (17) 2049 பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே? (19)
இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே (8) 2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9) 2069 முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும் பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே? (19)
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப் பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல் நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப் பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் (1) ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார் சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று (2) ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும் ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் (3) வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான் கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை (4) வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே (5) ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும் வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால் கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து (6) தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச் சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித் (7) தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் (8) தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல் ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு (9) கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் (10) கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும் சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத் (11) தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ? ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் (12) ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின் ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய் வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப் போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த (13) மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும் வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு (14) ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால் ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் (15) நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16) நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17) சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18) சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19) சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20) பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய் கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21) தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும் போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால் நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22) தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான் பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத் தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23) ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய் தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24) கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25) ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26) ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன் வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27) சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால் ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28) ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29) ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30) ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன் பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31) கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32) பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள் ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33) ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34) கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35) பாரோர் புகழும் வதரி வடமதுரை ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36) பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37) ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமங்கை ஆழ்வார்
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல் மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை (1) மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை (2) தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல் (3) தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவு அமைந்த அன்ன நடைய அணங்கே அடி இணையைத் (4) தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர் உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல் முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் (5) மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும் (6) பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர் தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன் (7) மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் (8) மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் (9) தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க (10) முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் (11) கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண் (12) கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த (13) மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண் (14) மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் (15) மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல் மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் (16) பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச் சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம் (17) துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல் நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் (18) மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு (19) இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார் அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே (20) அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் (21) மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின் அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் (22) மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார் தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23) இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24) பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25) துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26) மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27) சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும் பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28) தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29) மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30) துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31) பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32) கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33) முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும் கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34) மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35) பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36) பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37) இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38) என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள் மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39) என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்? மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40) மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும் அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41) மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும் கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42) என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43) மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45) இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான் அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய் முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் அன்ன திரு உருவம் நின்றது அறியாதே என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46) இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும் தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ? தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47) என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48) கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின் நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49) பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர் மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50) துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால் கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51) தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும் என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52) மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53) சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54) மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55) மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56) பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில் கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால் மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் (57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58) பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர் மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59) என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண் மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60) பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61) மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62) அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை மின்னை இரு சுடரை வெள்ளறை ள் கல் அறைமேல் பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63) பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64) சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை அன்னத்தை மீனை அரியை அரு மறையை முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65) மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப் பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66) அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67) மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68) அன்ன உருவின் அரியை திருமெய்யத்து இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69) உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள் அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70) முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71) மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72) மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73) கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர் மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74) மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும் கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75) மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76) தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண் துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும் மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த் தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும் மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77) துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78) தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79) உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமழிசை ஆழ்வார் 
நான்முகன் திருவந்தாதி

36 நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள் 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து 
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் 
அணைப்பார் கருத்தன் ஆவான்     (2416)


நான்காம் ஆயிரம் 
நம்மாழ்வார் 
திருவாய் மொழி 
காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்)
1. திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன 
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் 
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால் 
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே             (3851)
 
2. பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து 
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் 
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் 
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே             (3852)
 
3. பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் 
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை 
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் 
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே             (3853)
 
4. எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக் 
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் 
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் 
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே             (3854)
 
5. வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி 
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று 
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் 
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (3855)
 
6. திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் 
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து 
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் 
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே             (3856)
 
7. உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் 
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் 
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் 
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே?             (3857)
 
8. கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன் 
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே 
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் 
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே             (3858)
 
9. இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் 
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்? 
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் 
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே             (3859)
 
10. உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம் 
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் 
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு 
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே            (3860)
 
11. நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல் 
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் 
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் 
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (3861)

 

ஓம்  நமோ நாராயணாய!