Sunday, December 15, 2013

6. முதலாழ்வார்கள்


இந்தப் பதிவுக்கு 'வழி காட்டும் வைணவம்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் வைணவம் ஒரு மதம் என்ற அடிப்படையில் இறைவனை அடைய வழி காட்டுகிறது என்பது மட்டும் அல்ல. வைணவத்தை போதித்த, பின்பற்றிய ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் போன்றோர் தங்கள் சிந்தனைகள், எழுத்துக்கள் மற்றும் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில சிறப்பான வழிகளைக் காட்டியிருக்கிறார்கள் என்பதும்தான். இதற்கு ஒரு உதாரணம்தான் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு நிகழ்வு.

திருக்கோவலூர் என்று ஒரு தலம் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது. இது நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்று. இவ்வூரில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது.

மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையில் தெருவில் நடந்து வந்த ஒருவர் மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஒரு வீட்டின் ரேழியில் ஒதுங்குகிறார். (பழைய வீடுகளின் முகப்பில் திண்ணை என்ற மேடை இருக்கும். திண்ணைக்குப் பின்னே ரேழி என்று ஒரு இருட்டுப் பகுதி இருக்கும். ரேழியைத் தாண்டியபின் தான் வீட்டின் கூடம் வரும். இப்போதும் கிராமங்களில் இந்த அமைப்பு கொண்ட வீடுகள் நிறையவே இருக்கின்றன. பல வீடுகளில் வாயிற்கதவு திறந்தே இருக்கும். வீட்டின் புழங்கும் பகுதி கூடத்தில் இருந்துதான் துவங்குவதால் ரேழி வரை எவரும் வரலாம்.  வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்கம் (privacy) ரேழியைத் தாண்டித்தான் துவங்கும். எனவே மழை பெய்தால் தெருவில் நடப்பவர்கள் ஏதாவது ஒரு வீட்டின் ரேழியில் வந்து நின்று விட்டு மழை நின்றவுடன் வெளியேறும்  பழக்கம் உண்டு.)

ரேழியில் நுழைந்தவர் அங்கிருந்த குறுகிய திண்ணையில் படுத்துக் கொள்கிறார்.

சற்று நேரம் கழித்து மழைக்கு ஒதுங்க மற்றொருவர் அங்கே வருகிறார். ஏற்கெனவே ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்து, 'இடம் இருக்கிறதா?' என்று வினவுகிறார்.

படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்' என்று சொல்லி, புதிதாக வந்தவருக்குத் தம் பக்கத்தில் உட்கார இடம் அளிக்கிறார். சற்று நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் மழைக்கு ஒதுங்க அங்கே வருகிறார். ஏற்கெனவே இருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் தமக்கு அங்கே இடம் இருக்குமா என்று தயங்கி நிற்கிறார். அப்போது உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்கின்றனர். முதலில் வந்தவர், 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்' என்கிறார். மூவரும் நின்று கொள்கின்றனர்.

மூவருக்கும் நெருங்கி நிற்கத்தான் அங்கே இடம் இருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மூவருக்கும் தங்களை யாரோ நெருக்குவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்காவதாக ஒருவர் அங்கே வந்திருப்பதை மூவரும் உணர்கிறார்கள். ஆனால் அவர் உருவம் அவர்களுக்குப் புலப்படவில்லை. வானம் கருத்திருப்பதால் அந்த இடம் இருட்டாக இருக்கிறது.

அப்போது ஒரு மின்னல் வீசுகிறது. மின்னல் வீசிய அந்த ஒரு கணத்தில் நான்காவதாக வந்தவரின் முகத்தை மூவரும் பார்க்கிறார்கள். நான்காவதாக அங்கே வந்திருப்பவர் பகவான் விஷ்ணுதான்!

மீண்டும் பகவானின் திருமுகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனால் மின்னல் அடித்தால்தான் பார்க்க முடியும். மின்னல் எப்போது அடிக்குமோ?

ஒரு விளக்கு இருந்தால் திருமாலின் முகத்தை மீண்டும் காணலாமே என்று நினைக்கிறார் முதலில் வந்தவர். விளக்கு ஏற்ற அகல், எண்ணெய், திரி, நெருப்பு  எல்லாம் வேண்டுமே! அவற்றுக்கு எங்கே போவது? எனவே தனது ஞானத்தால், தானே ஒரு விளக்கை உருவாக்குகிறார் அவர்.

அவர்தான் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். திருமாலின் மீது ஒரு பாசுரம் பாடி ஞான விளக்கை ஏற்றுகிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று.

இதன் பொருள்:
இவ்வுலகத்தையே அகலாக்கி, அலை வீசும் கடலையே நெய்யாக்கி, சூரியனையே திரிச் சுடராக்கி, கையில் சுடர் விடும்  சக்கரத்தை ஏந்தியிருக்கும் (அந்தச் சுடரின் முன் சூரிய ஒளி எம்மாத்திரம்!)  உனது திருவடியில் என் பாசுரத்தை சொல்மாலையாகச் சூடுகிறேன். துன்பக்கடலான இவ்வுலகிலிருந்து நான் மீள வேண்டும் (உன் திருவடி சேர வேண்டும்) என்று வேண்டி

விளக்கு தொடர்ந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்தால்தானே திருமாலின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்? எனவே முதல் பாடலைத் தொடர்ந்து அவர் மேலும் 99 பாசுரங்கள் பாடுகிறார். இவர் பாடிய நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்ற தொகுப்பாக அழைக்கப் படுகின்றன.

இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்தவர்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று தொடங்குகிறார். 

இதன் பொருள்:
அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, உன்னை நினைத்து இன்புற்று உருகும் என் மனத்தையே திரியாக்கி, ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறேன். என்னுடைய தமிழ் அறிவால் நாராயணனின் புகழ் பாடுகிறேன்.

இவரும் நூறு பாசுரங்கள் பாடுகிறார். இவர்தான் முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தழ்வார். இவர் பாடிய பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

மூன்றாவதாக வந்தவர் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார். இவர் பாடிய நூறு பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி என்று வழங்கப்படுகின்றன. இவர் பாடிய முதல் பாசுரம்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

இதன் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பெருமாளின் திருக்கோலத்தை வர்ணித்துப் பாடப்பட்ட பாடல் இது.  முதலில் ஆழ்வாரின் கண்ணுக்குத் தெரிவது திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி. (திருமகளை முன்னிட்டே திருமாலை அணுக வேண்டும் என்று முன்பு நாம் பார்த்த வைணவக் கோட்பாட்டின் வெளிப்பாடுதான் இது.) திருமகளின் மேனி பொன் போன்று விளங்குகிறது. பிறகு திருமாலின் பொலிவுக்கு அழகு சேர்க்கும் அவரது கரிய நிறத்தைக் காண்கிறார். அதற்குப்பின் பெருமாளின் தோள்களை தரிசிக்கிறார். அங்கே அவர் பார்த்தது சங்கும் சக்கரமும். 'என் ஆழி வண்ணன்' என்று கடல் நிறம் கொண்டவர் எம்பெருமான் என்று சொல்லி முடிக்கிறார்.

முதல் ஆழ்வார்களைப் பற்றி விரிவாக பின்னொரு பகுதியில் எழுத எண்ணியுள்ளேன்.

இப்போது இந்தச் சம்பவத்தைச் சற்று நெருக்கமான கோணத்தில் பார்ப்போம். முதலாழ்வார் தனது வசதியைக் குறைத்துக்கொண்டு, படுத்துக்கொள்ள முடியாவிட்டால் என்ன, அதுதான் உட்கார இடம் இருக்கிறதே என்று எண்னி இரண்டாவதாக வந்தவருக்கு இடமளித்ததைப் பார்த்தோம். அதற்கும் மேலாக மூன்றாவதாக ஒருவர் வந்தபோது உட்கார்ந்திருந்த இருவரும் தங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்ற பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது!

இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடையே இருக்க விரும்பி பகவானே நேரில் வந்து அவர்களது இட நெருக்கடியைத் தானும் பகிர்ந்து கொண்டதை பார்க்கும்போது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் தேவையையும், உயர்வையும், இன்றியமையாமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். நம்மிடம் இருப்பது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. மூன்று பேர்தான் நிற்க முடியும் என்று கருதப்பட்ட இடத்தில் நான்கு பேர் நின்றார்களே எப்படி? தேவை ஏற்பட்டால் எதுவும் சாத்தியம்!

'மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்'
என்ற கண்ணதாசனின் வரிகள் கூட இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

நம்மிடம் உள்ள எதையும், அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படிப் பகிர்ந்து கொள்பவர்களைத் தேடி இறைவன் வருவான். இந்தக் கருத்தை இந்தச் சம்பவத்தின் உட்பொருளாக எடுத்துக்கொண்டு, இதை வைணவத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று கொள்ளலாமே!

Tuesday, December 3, 2013

5. ஆச்சாரியர்கள்


வைணவத்தில் ஆச்சாரியருக்குச் சிறப்பான இடம் உண்டு. ஆச்சாரியர் (ஆசான் அல்லது குரு) மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பது வைணவக் கோட்பாடு. முதலில் ஆச்சாரியர் அப்புறம்தான் ஆண்டவன் என்று கூடச் சொல்லலாம்.

ஆச்சாரியரின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் மதுரகவி ஆழ்வார். இதைப் பற்றி முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். நம்மாழ்வாரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டவர் இவர். இவர் பாடிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாசுரங்களும் நம்மாழ்வாரைப் போற்றித்தான்.

இந்தப் பதிகத்தில் (பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு பதிகம் என்று வழங்கப் படுகிறது) வரும் ஒரு பாசுரம் இது.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்குஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே.

இதன் பொருள்:

அறிஞர்களால் மற்றுமே உணரக் கூடிய வேதங்களை, அவற்றின் பொருள் அனைவருக்கும் விளங்கும்படி தமிழில் பாசுரங்களாகப் பாடி, என் மனதில் பதிய வைத்த சடகோபனுக்கு (நம்மாழ்வாருக்கு)ப் பணி செய்வதே என் வாழ்க்கைப் பயன்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்குச் சிறப்பான உட்பொருள் உண்டு. 'பிறவிப் பயன்' என்று சொல்லாமல் 'அடிமைப் பயன்' என்று ஏன் சொல்கிறார்? விசிஷ்டாத்வைதத் தத்துவத்தின்படி பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு எஜமானருக்கும் வேலைக்காரருக்கும் உள்ள உறவு. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது. பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் கடமை. அதனால் அடிமைப் பயன் என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். (இது எனது கருத்து. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் தேர்ந்த ஞானம் பெற்ற அறிஞர்கள் இதற்கு வேறு சிறப்பான பொருளைக் கூறக்கூடும்.)

ஆச்சாரியர் என்பவர் யார்? வைணவர்கள் அனைவருக்கும் ஆச்சாரியர் விசிஷ்டாத்வைதத் தத்துவைத்தைப் போதித்த ராமானுஜர். அவருடைய ஆச்சாரியர்கள், அவருக்குப் பின் அவர் வழியில் செயல் பட்ட/பட்டு வரும் ஆச்சாரியர்கள் என்று வைணவ ஆச்சாரிய பரம்பரை, நிறுவனங்களின் நிர்வாக அமைப்பைப்போல் பல படிகள் கொண்ட அமைப்பு (hierarchy).

வைணவ ஆச்சாரிய பரம்பரையை விவரிக்கும் ஒரு பாசுரம் இது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

முதலில் நமக்கு உயிர்கொடுத்த பெற்றோரைச் சரணடைய வேண்டும்
பிறகு நமது பெற்றோர்களின் ஆச்சாரியர்களை (குருக்களை) நம் குருவாக ஏற்று வணங்க வேண்டும். பிறகு இறைவனின் அருளால் நமக்குக் கிடைத்த ராமானுஜரையும், அவருடைய குருக்களான் பெரிய நம்பி, மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார், ஆளவந்தார் (நாதமுனி) ஆகியோரையும் வணங்க வேண்டும். பிறகு சடகோபன் என்கிற நம்மாழ்வார், சேனைநாதனான விஷ்வக்சேனர், எல்லா நலங்களையும்  அமுதமாக வழங்கும் திருமகள் இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை வணங்க வேண்டும்.

இந்த ஆச்சாரியர்களின் பட்டியலில் இரண்டு முக்கியமான பெயர்கள் விட்டுப் போயிருப்பதை சிலர் கவனித்திருக்கக்கூடும். வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் பெயர்கள் இதில் இல்லை. காரணம். இந்தப் பாசுரத்தை எழுதியவர் வேதாந்த தேசிகர்! மணவாள மாமுனிகள் இவருக்குப் பின்னால் தோன்றியவர்.



Tuesday, November 26, 2013

4. ஆழ்வார்கள்


வைணவத்தின் பெருமை பேசி, திருமாலின் பெருமை பாடிய முனிவர்கள்  வேத, உபநிஷத் காலத்திலிருந்தே உண்டு. வால்மீகி, பராசரர், வியாசர், சுகர் என்று பல முனிவர்கள் இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் மூலமாகத் திருமால் வழிபாட்டை வளர்த்திருக்கிறார்கள். ஆயினும், வைணவத்துக்குப் பெருமை சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிகச் சிறப்பானது.

திருமாலைப் போற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படுகின்றன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரம் என்பதால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் இப்பாசுரங்கள் வழங்கப்படுகின்றன.

நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரம் என்று ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வார்கள் பன்னிருவர்.

 பெயர்
 வாழ்ந்த காலம்
 பாசுரங்கள்
 பொய்கையாழ்வார்
 கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 முதல் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பூதத்தாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 இரண்டாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பேயாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 மூன்றாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 திருமழிசை ஆழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம்   (120 பாசுரங்கள்)
 திருமங்கை ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருவெழுக்கூற்றிருக்கை (1 பாசுரம்), திருக்குறுந்தாண்டகம் (1084 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
சிறிய திருமடல்(40 பாசுரங்கள்), பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
 தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 திருமாலை (45 பாசுரங்கள்), திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்)
திருப்பாண் ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 அமலனாதி பிரான் (10 பாசுரங்கள்)
 குலசேகர ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)
  பெரியாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
பெரியாழ்வார் திருமொழி (473 பாசுரங்கள்)
 ஆண்டாள்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்), திருப்பாவை (30 பாசுரங்கள்)
 நம்மாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 திருவாய் மொழி (1102 பாசுரங்கள்), திருவாசிரியம் (7 பாசுரங்கள்), திருவிருத்தம் (100 பாசுரங்கள்), 
பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)
 மதுரகவி ஆழ்வார்
  கி.பி.9ஆம் நூற்றாண்டு
 கண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள்)


ஆழ்வார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சில விவரங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிசை ஆழ்வார்கள் வாழ்ந்த காலப்படியான வரிசை.  ஆழ்வார்களின் காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் விளங்குகின்றன. குறிப்பாக நம்மாழ்வார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது வைஷ்ணவ குரு பரம்பரை வரலாறு.

மொத்தமுள்ள நாலாயிரம் பாசுரங்களில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இருவர் மட்டுமே இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கபடுகின்றனர். இவர்கள் மூவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சந்தித்தது பற்றிய ஒரு சுவாரசியமான கதையை இன்னொரு பதிவில் கூற விழைகிறேன்.

இந்த மூவரைத் தவிர, சம காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள்:
 பெரியாழ்வார்-ஆண்டாள்
 நம்மாழ்வார்- மதுரகவி ஆழ்வார். 

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாள் திருமாலையே விரும்பி மணமுடித்த பெருமை பெற்றவர்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். இவர் பாண்டியன் அவையில் திருமாலே முழுமுதற் கடவுள் என்று வாதம் செய்து நிலை நாட்டி, பாண்டிய அரசனால் பொற்கிழி வழங்கப்பெற்று, யானை மீது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திருமால் கருடன் மீது வந்து பெரியாழ்வாருக்குக் காட்சி அளித்தார். பகவானின் அழகிய திருவுருவை அனைவரும் தரிசனம் செய்ததால் பகவானுக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டு விடப்போகிறதே என்று கவலைப்பட்டு பல்லாண்டு, பல்லாண்டு என்று பெருமாளையே வாழ்த்திப் பாடினார். (பொதுவாக நம்மை விடப் பெரியவர்கள்தான் நம்மை வாழ்த்த வேண்டும் என்பது மரபு.) பெருமாளையே வாழ்த்திப் பாடும் பேறு பெற்றதால் இவர் பெரியாழ்வர் என்று பெயர் பெற்றார்.

நம்மாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். இவர் வடநாட்டில் யாத்திரை செய்து கொண்டிருதபோது, தெற்குத் திசையில் ஒரு ஒளி தோன்றியதைக் கண்டு அந்த ஒளியின் திசையில் பயணித்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தார். அங்கே திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) ஒரு புளிய மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்திருந்த 16 வயதுச் சிறுவனின் தலைக்குப் பின்புறம் அந்த ஒளி துவங்கியதைக் கண்டார். அந்தச் சிறுவன் தான் ஆழ்வார்களில் முதன்மையானவராகப் போற்றி வணங்கப்படும் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்த மதுரகவி ஆழ்வார் அவருடைய சீடராக அவருடனேயே வாழ்ந்தார். இவர் எழுதிய கண்ணி நுண் சிறுத் தாம்பு என்ற பதினோரு பாடல்களும் நம்மாழ்வாரைப் பற்றித்தான்! திருமால் மீது பாசுரம் எழுதாத ஒரே ஆழ்வார் இவர்தான்!

நம்மாழ்வார்தான் தனக்குக் கடவுள் என்பதை, 'தேவு மற்றறியேன் குருகூர் நம்பி' என்ற இவரது வரிகள் விளக்குகின்றன.

ஆச்சாரியாரை (குரு) முன்னிட்டே ஆண்டவனை அணுக முடியும் என்ற வைணவக் கோட்பாட்டுக்கு ஒரு சிறப்பான உதாரணமாக விளங்கியவர் மதுரகவி ஆழ்வார்.

ஆழ்வார்களைப் பற்றி மேலும் பல சுவையான, பயனுள்ள விஷயங்களை பின்னால் வரும் பதிவுகளில் கூற விழைகிறேன்.

Thursday, October 24, 2013

3. மஹாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள்

மஹாவிஷ்ணுவுக்கு ஐந்து நிலைகள் உண்டு.
பரம்
வியூஹம்
விபவம்
அந்தர்யாமி
அர்ச்சம்

முதல் நிலையான பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி  என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர் வெளியில் அமைந்துள்ளது. இங்கே மஹாவிஷ்ணு பரவாசுதேவன் என்ற பெயரில் விளங்குகிறார். 

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி சேஷனை இருக்கையாகக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியருடனும், நித்யசூரிகள் என்று அழைக்கப்ப்படும் அமரநிலை அடைந்தவர்களுடனும் விளங்குகிறார்.

நித்யசூரிகளில் அஷ்ட திக் பாலர்கள் (எண்திசைக்காவலர்கள்), 8 துவாரபாலகர்கள் (வாயில் காப்போர்கள்), விஷ்வக்சேனர் முதலியோர் அடங்குவர்.

மண்ணுலக  வாழ்க்கை முடிந்து வைகுண்டம் அடையும் பேறு பெற்றவர்கள்  வந்து சேரும் இடம் இதுதான்.

பகவானுக்கு ஆறு குணங்கள் உண்டு.(ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவப்படி பரம்பொருள் குணங்கள் அற்றவர் - நிர்க்குணப் பிரம்மம் என்று கருதப்படுகிறார். ஆனால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவப்படி பகவான் கல்யாண குணங்கள் எனப்படும் உயர்ந்த குணங்களைக் கொண்டவர்.)

1) ஞானம் - எல்லாம் அறிந்திருத்தல்
2) ஐஸ்வர்யம் - எல்லாச் செல்வங்களையும் தன்னிடம் கொண்டிருத்தல்
3) சக்தி - எதையும் செய்யக் கூடிய ஆற்றல்
4) பலம் - எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்கும் (காக்கும்) வலிமை
5) வீரியம் - சக்தி சிறிதும் குன்றாத தன்மை
6) தேஜஸ் - தன்மயமான,  முழுமையான நிலை மற்றும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கும் தெய்வாம்சம்.

பர வாசுதேவர் இந்த ஆறு குணங்களையும் தன்னிடம் கொண்டவராக விளங்குகிறார்.

இரண்டாவது நிலை வியூஹம். இங்கே பகவானுக்கு நான்கு உருவங்கள் உண்டு. வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் இவர்கள் முறையே கிழக்கு,தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திசைகளை நோக்கி உள்ளனர்.

வியூஹ வாசுதேவன் பர வாசுதேவன்தான்.
வியூஹ வாசுதேவனிடமிருந்து அறிவு, பலம்  என்ற இரண்டு குணங்களைப் பெற்று சங்கர்ஷணர் விளங்குகிறார். அறிவைக்கொண்டு அவர் சாஸ்திரங்களை உருவாக்குகிறார். பலத்தைக்கொண்டு பிரளய காலத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கிறார்.

சங்கர்ஷணரிடமிருந்து ப்ரத்யும்னரும், ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தரும் உருவாகிறார்கள். ப்ரத்யும்னர் வீரம், வீரியம் (ஆற்றல்)  என்ற இரு குணங்களைக்கொண்டு எல்லா உலகங்களையும் உருவாக்கி, அங்கே தர்மம் நிலைபெறச் செய்கிறார்.

ப்ரத்யும்னரிடமிருந்து அநிருத்தர் உருவாகி, சக்தி, தேஜஸ் என்ற இரு குணங்களைக் கொண்டவராக விளங்குகிறார். உலகைக் காத்தல், அறநெறிகளையும், உண்மைகளையும் போதித்தல் என்ற இரு பணிகளுக்குக் காரணராக விளங்குகிறார்.

இவற்றைக் கோர்வையாகப் பார்க்கும்போது, படைத்தல், காத்தல், அழித்தல், உலகில் தர்மம் நிலை பெறச் செய்தல் ஆகியவற்றை பகவான் விஷ்ணு செயல் படுத்துகிறார் என்று விளங்கும். சங்கர்ஷணர், ப்ரத்யும்னர், அநிருத்தர் என்ற மூன்று வடிவங்களில் இந்தப் பணிகளைச் செய்கிறார் என்பதும், குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ப  ஒவ்வொருவரும் இரண்டு குணங்களைச் சுவீகரித்துக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் ப்ரக்ருதி, மஹத், அகங்காரம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ப்ரக்ருதி என்பது புலன்களால்  அறியப்படுபவற்றைக் குறிக்கும். நம் உடல், நிலம், நீர், காற்று போன்றவை ப்ரக்ருதி என்ற வகையில் அடங்கும்.

உலகில் நம் கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படும் சக்திகள் மஹத் என்று அறியப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை, இயற்கை விதிகள், அற நெறிகள் போன்றவற்றை மஹத் என்று கூறலாம்.

மூன்றாவது அகங்காரம். இது தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

சங்கர்ஷணர் ப்ரக்ருதிக்கும், ப்ரத்யும்னர் மஹத்துக்கும், அநிருத்தர் அகங்காரத்துக்கும் பொறுப்பு வகிக்கின்றனர்.

மஹாவிஷ்ணுவின் மூன்றாவது நிலை விபவம்.  விபவம் என்பது பகவானின் அவதாரங்களைக் குறிக்கும்.

முதல் இரண்டு நிலைகள் நம்மால் அணுக முடியாதவை. நாம் அணுக முடியாத நிலையில் பகவான் இருப்பதில் நமக்கும் பயனில்லை, அவருக்கும் பயனில்லை! ஆகவேதான் நம்முடன் நெருக்கமாக இருக்கும் பொருட்டு இவ்வுலகில் அவதரித்தார் விஷ்ணு.

'அவதாரம்' என்ற சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு 'இறங்கி வருதல்' என்று பொருள். நம்மால் அணுக முடியாத நிலையில் இருக்கும் கடவுள் நம் மீதுள்ள கருணையால் கீழே இறங்கி இவ்வுலகில் அவதரிக்கிறார்.

விஷ்ணுவின் அவதாரங்கள் மொத்தம் பத்து. இதுவரை அவர் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது. பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தைக் கலியுக முடிவில் எடுப்பார்

நான்காவது நிலை அந்தர்யாமி. நம் அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக பகவான் விளங்குவதுதான் அந்தர்யாமி என்ற நிலை. ஆம். கடவுளைத் தேடி நாம் வெளியே எங்கும் போக வேண்டியத்டில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

நம் உடலுக்குள் உயிர் இருக்கிறது. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் - அந்தராத்மாவாக. வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா.

நமக்குள் அந்தர்யாமியாக பகவான் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டால், நம் வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகி விடும்.

ஐந்தாம் நிலை அர்ச்சம் என்று அழைக்கபடுகிறது. இவ்வுலகில் பல திருத்தலங்களில் விக்கிரக வடிவில் இருந்து பகவான் நமக்கு அருள் புரிவதைத்தான் அர்ச்சம் என்ற நிலை குறிக்கிறது. எல்லோரும் எளிதாக வணங்கி மகிழும் நிலை அர்ச்சம். அவதார காலங்களில் வாழும் வாய்ப்பு இல்லாத நமக்கு பகவானை தரிசித்து மகிழும் வாய்ப்பை அர்ச்சம் வழங்குவதால், பகவானின் இந்நிலை  அர்ச்சாவதாரம் என்று வழங்கப் படுகிறது.

Sunday, October 20, 2013

2. திருமால் வழிபாடு

உலகில் பல மதங்கள் உண்டு. அவற்றை உருவாக்கியவர்களைப் பற்றிய வரலாறு உண்டு. 

எவராலும் படைக்கப்படாமல் இயல்பாகத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் நிலவி வரும் மதம் இந்து மதம்,

இந்து மதம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவன் இந்துவாக "மாறுவதற்கு" எந்த விதச் சடங்குகளும் தேவையில்லை. மத மாற்றச் செயல்களில் ஈடுபாடும் குருமார்களும் இல்லை.

எவர் வேண்டுமானாலும் தன்னை இந்து என்று கருதிக் கொள்ளலாம். கோவிலுக்குப் போயோ, கீதை படித்தோ, பண்டிகைகளைக் கொண்டாடியோ தன்னை இந்து என்று நிரூபிக்க வேண்டியதில்லை.

இந்து மதத்தில் பல பிரிவுகள் உண்டு என்று சிலர் கூறுவார்கள். இவை பிரிவுகள்அல்ல, வழிபாட்டு முறைகள்.

இந்து மத வழிபாட்டு முறைகள்  ஆறு வகையானவை என்று வகுத்திருக்கிறார் ஆதிசங்கரர்.

1. சைவம் (சிவபெருமானை வழிபடுவது)
2, வைணவம் (திருமால் வழிபாடு)
3. சாக்தம் (சக்தி வழிபாடு)
4. காணபத்யம் (விநாயகரை வழிபடுவது)
5. கௌமாரம் (முருகனை  வழிபடுவது)
6. ஸௌர்யம் (சூரிய வழிபாடு)

ஆதிசங்கரர் பல தெய்வங்களைப் பற்றியும் சுலோகங்கள் எழுதியிருந்தாலும், தன மனதில் திருமாலுக்கு மிக உயர்வான இடம் கொடுத்திருந்தார் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அவர் காசியில் இருந்தபோது தெருவில் நடந்து சென்ற சில பண்டிதர்கள் ஒரு கடினமான இலக்கண விதியைப் பற்றி  விவாதித்துக் கொண்டே சென்றனர். 

ஆதிசங்கரர் அவர்களை நிறுத்தி, 'கோவிந்தனைத் துதியுங்கள். உங்கள் இறுதிக் காலத்தில் இந்த இலக்கண அறிவு உங்களுக்குத் துணை நிற்காது' என்று கூறி 'பஜ கோவிந்தம்' என்று திருமாலின் மீது ஒரு அற்புதமா சோஸ்திரத்தை இயற்றினார்.

ஒருமுறை அவர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து இறந்து போன ஒரு அரசனின் உடலுக்குள் புகுந்திருந்தபோது அவரது மதக் கருத்துக்களை ஏற்காத காபாலிகர்கள் என்ற மதத் தீவிரவாதிகள் அவரது உடலைக் கொளுத்த முயன்றனர். 

அப்போது ஆதிசங்கரர் அடைக்கலம் தேடியது திருமாலின் அவதாரங்களில் ஒருவரான நரசிம்மரைத்தான். நரசிம்மரை  தியானித்து "லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்பம்'" என்ற ஸோஸ்திரத்தைப் பாடினார். நரசிம்மரின் அருளால் எரிந்து போன அவரது உடல் மீண்டும் முழுமை பெற்றது.

அவரது தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது  தன் அன்னை மோட்சம் அடைவதற்காகத்   திருமாலைக் குறித்து அவர் அருளிய துதி இது.

"வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது."

'வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால்  என்னைக் காக்க வேண்டும்' என்ற பொருள் கொண்ட இந்தத் துதியைக் கேட்டபடியே உயிர் துறந்தார் அவர் தாய்.

இந்தச் செய்யுள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், விஷ்ணுவின் ஆயிரத்தெட்டு நாமங்களும் முடியும் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் எழுதியுள்ள இன்னொரு ஸ்லோகம் இது.

"ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி."

'விண்ணிலிருந்து விழும் தண்ணீர் எல்லாம் கடலைத்தான் சென்றடையும். அதே போல நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அது கேசவனைதான் (திருமாலைத்தான்) சென்றடையும்.' என்பது இதன் பொருள். கேசவன் என்பது திருமாலின் பன்னிரு திருநாமங்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

ராமானுஜரைப் போல் ஆதிசங்கரர் ஒரு வைணவ ஆச்சார்யராகக் கருதப்படாவிட்டாலும், அவர் திருமால் வழிபாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை மேற்கண்ட உதாரணங்களிலிருந்து அறியலாம்.

எந்த ஒரு செயலையும் துவங்குமுன் 'இந்தச் செயல் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது' என்று சொல்லித் துவங்குவது வைணவ மரபு.

அதுபோல,  இந்தப்  பதிவும் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது என்று கூறி இந்த வலைப் பதிவைத் தொடர்கிறேன்.

Monday, October 14, 2013

1. வைணவம் - இத்தொடர் பற்றி ஓர் அறிமுகம்

தமிழில் திருமால் என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதி வழிபடும் நெறிமுறை  வைணவம்.

வைணவத்தைப் பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததால் நான் ஒரு வைணவன். 

மற்றபடி  என் மதம், என் இனம், என் மொழி, என் தேசம் ஆகியவைதான் உலகத்தில் உயர்ந்தவை  என்று கருதுவது சரியல்ல என்பது என் பணிவான கருத்து.

ஆயினும், நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம் மிக உயர்ந்தது என்று கருதுவது மனித இயல்பு. 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாடினார் பாரதியார். 'தேசங்களில் சிறந்தது இங்கிலாந்து' என்று ஷேக்ஸ்பியர் கருதியிருக்கக் கூடும்!

நாம் பிறந்த நாடு, நம் மொழி, நம் மதம், நம் இனம் போன்றவற்றைப் பற்றிப் பெருமை கொள்வதில் தவறில்லை. 

இந்தப் பெருமைகளை நாம் கூறிக் கொள்ளும்போது மற்றவர்களின் இனம், மதம், மொழி, நாடு போன்றவை நம்முடையவற்றை விட சற்றே குறைந்தவை என்ற கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 

எனவே இங்கே இடம் பெறும் கட்டுரைகள் திருமால் பெருமையைப் பேசும்போது, அது மற்ற தெய்வங்களைக் குறைத்துப் பேசுவதாக ஆகாது.

நான் ஒரு அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்தபோது அங்கே என் இருக்கைக்கு அருகே ஒரு முதியவர் பணி புரிந்து வந்தார். 

ஒருமுறை, ஒரு சக ஊழியர், அந்த முதியவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பணி புரிந்து வந்த ஒருவரைக் குறிப்பிட்டு "அவர் நிறைய விஷயம் தெரிந்தவர்" என்றார். உடனே முதியவர், "அப்படியானால் நான் விஷயம் தெரியாதவனா?" என்று சண்டைக்கு வந்து விட்டார்.

'திருமால் பெருமைக்கு நிகரில்லை' என்று சொன்னால் இது மற்ற தெய்வங்களின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. 

இந்தக் கட்டுரைகளில் வைணவத்தைப் பற்றி மட்டுமே எழுதப் போகிறேன். இதை மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

விஜயதசமி தினமான இன்று வைணவத்தின் பெருமைகளைப் பேசும் இந்த வலைப் பதிவை துவங்குகிறேன். 

இந்தத் தொடர் சீராகவும், சிறப்பாகவும் வெளி வர, நான் வணங்கும் திருமாலின் அருளும், திருமால்  பெருமையைப் பாடிய ஆழ்வார்களின் அருளும், திருமால் பெருமையைப் பறை சாற்றிய ராமானுஜரின் கருணையும், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்களின் ஆசியும், அமரர்களாகி விட்ட என் தாய் தந்தையரின் ஆசியும், எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தொடரைப் படிக்கப் போகும் வலை வாசகர்களின் ஆதரவும், ஊக்கமும் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பில் நான் எழுத எண்ணியிருக்கும் விஷயங்கள் வைணவத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவும் ஆரம்பப் பாடமுமாகவுமே இருக்கும். 

வைணவ மதத் தத்துவங்களை விளக்கும் ஆழமான கட்டுரைகளை நான் எழுதப் போவதில்லை. அதற்கான புலமையோ ஆராய்ச்சி அறிவோ என்னிடம் இல்லை. 

வைணவம் பற்றி ஆழ்ந்த ஞானம் பெற்றுள்ள அறிஞர்கள் யாராவது இந்த வலைப் பதிவைப் படிக்க நேர்ந்தால் இது ஒரு எளியவனால் வைணவம் பற்றி அறிய விரும்பும் எளிய மனிதர்களுக்காக எழுதப் பட்டது என்பதை மனதில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ:


ஓம் நமோ நாராயணாய!